ப்ளாகுக்கென இந்தக் கருப்பரிசியை வாங்கினேனாம்,அதனால் ப்ளாக் அரிசி என்று எங்கள் வீட்டில் பெயர் வைத்துள்ளனர்.
ஊரில் எங்கள் வீடு ஒரு விவசாயக் குடும்பம்.எங்கள் கழனியில் விளையும் நெல்லைத்தான் குறைந்தது ஒரு 10 மூட்டைகள் அளவிற்கு ஊற வைத்து, அவித்து, ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்து எடுத்து வருவாங்க.
அரைக்க எடுத்துப் போகும்போதே எங்கம்மா சொல்லி அனுப்புவாங்க, 'ஒன்னுக்கு ரெண்டு தடவையா போட்டு நல்லா எழைய (இழைத்து) பிடிச்சு எடுத்துட்டு வாங்க'ன்னு,அதாவது நன்றாக தீட்டி அரைத்து வரும்படி. அதிலுள்ள சத்து முழுவதும் வெளியே போய்விடும் என்பது தெரியாமல். தெரிந்தாலும் நல்லா பாலிஷ் போட்ட மாதிரி இருந்தால்தானே பிடிக்கிறது.
அரிசி வீட்டிற்கு வந்த பிறகு ஆள் வைத்து புடைத்து முழு அரிசி தனியாகவும்,அதிலுள்ள நொய் தனியாகவும்,கல்மண் இல்லாமலும் பிரித்து எடுப்பாங்க.
'அரிசியில் ஒன்னுரெண்டு கருப்பரிசி ஏதாவது இருந்தா பொறுக்கிடுங்கம்மா, சாப்பிடும்போது பார்த்திட்டா உங்க அண்ணன் சத்தம் போடுவார்',என எங்க அப்பாவை சொல்வார்.
அவர் மகளான நான்தான் இன்று கடையிலிருந்து கருப்பரிசி சகிதமாக வந்திருக்கிறேன்.
கருப்பரிசியின் நெல்மணி கருப்பாகவும்,சிவப்பரிசியின் நெல்மணி சிவப்பாகவும் இருக்கும். இவற்றை காக்கா பொன்னி,கார் நெல் என்பர்.நெல் அறுவடையின்போதே இவற்றைத் தனியாக பிரித்துவிடுவர்.இவற்றைக் காயவைத்து உரலில் போட்டு இடித்து தரும் அரிசி அவ்வளவு சுவையாக இருக்கும்.
காதுகுத்து அரிசியைக்கூட இந்த சிவப்பரிசியில்தான் செய்வாங்க.சுவை சொல்லவே வேண்டாம்.
அதற்கான காரணங்களுள் விலையும் ஒன்று.இவ்வளவு விலை கொடுத்து வாங்கி சாப்பிடப் பிடிக்காவிட்டால் என்ன செய்வது என்பதாலும்தான்.
கருப்பரிசியை வாங்கி வரலாம் என கடைக்குப் போனால் ஒரு எல்பி / lb (493 g) $5 என்றிருந்தது. பிறகு ஒரு wholesale கடைக்குப் போனால் 4 lb $7 என்றிருக்கவும் 'இது பரவாயில்லையே' என வாங்கி வந்தேன்.கருப்பரிசியில் அடங்கியுள்ள சத்துகளினால் விலை ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை.
வீட்டினுள் நுழையுமுன்னே,"ஏங்க,இனி கருப்பரிசி வெண்பொங்கல்,பஞ்சு மாதிரியான கருப்பரிசி இட்லி என எல்லாமும் கருப்பரிசில்தான்.இந்த அரிசியில் அது இருக்காம்,இது இருக்காம்,அவ்வளவு ஏன்,எல்லாமே இருக்காம்", என்றேன்.
நான் இப்படி எல்லாம் அளந்துகொண்டு,அடுக்கிக்கொண்டே போகவும் இவர் ,'ஒரு விஷயத்த நீ இன்னும் புரிஞ்சிக்கல.எல்லாமே வியாபாரத் தந்திரம்தான், வியாபார நோக்குதான்.இப்படி எல்லாம் விளம்பரம் செய்யவில்லை என்றால் நீ இவ்வளவு விலை கொடுத்து இந்த அரிசியை வாங்குவியா?",என்றார்.
அதுவும் சரிதான்.எந்த அரிசியாக இருந்தாலும் அளவோடு சாப்பிட்டால் வேண்டாதப் பிரச்சினைகள் நெருங்கப் போவதில்லை.
கருப்பரிசியை சாதாரண அரிசி மாதிரிதான் சமைத்து சாப்பிடுகிறேன். சுவையும் இரண்டொரு நாளில் பிடித்துப்போனது.வேறு ஏதாவது வித்தியாசமாக சமைத்தால் பதிவிடுகிறேன்.
மேலே உள்ள படத்திலிருந்து கொஞ்சமாக எடுத்து சுவைத்துப் பாருங்க. எல்லாம் டௌன்லோட் பண்ணி சாப்பாட்டை வெளியில் எடுக்க முடியாது என்ற தைரியத்தில்தான்.
"நாங்கள் எடுத்து சுவைத்துப் பார்க்க முடியாது என்ற தைரியத்தில்தானே சமையல் ப்ளாகே எழுதறீங்க"னு நீங்கள் சொல்வது கேட்கிறது.
கருப்பரிசி பற்றிய விவரங்களுக்கு http://www.blackrice.com/ க்கு போய் பார்க்கலாமே.