பூண்டுத் தாள்
உழவர் சந்தையில் பூண்டுடன்கூடிய பூண்டுச் செடிகள் கிடைக்கும். ஆனால் நான் வாங்கியதில்லை. சரி வீட்டிலேயே வளர்த்துப் பார்க்கலாமே என 'யூ டியூப்'பில் தேடினால் ஏகப்பட்ட வீடியோக்கள் உள்ளன. இலையுதிர் காலத்தில் நட்டு கோடையில் அறுவடை செய்ய வேண்டுமாம். மண்தோட்டம் வைத்திருப்பவர்கள் முயற்சி செய்யலாம்.
எனக்கு பூண்டுகூட வேண்டாம், பூண்டுத் தாள்தான் வேண்டும், அதன் செடி எப்படி வளருகிறது என்பதைப் பார்க்க ஆசை என்பதால் சும்மா முயற்சி செய்தேன்.
உழவர் சந்தையில் இருந்து வாங்கி வந்த பூண்டிலிருந்து மூன்று பூண்டுப் பற்களை மட்டும் தோலுடன் தனியே பிரித்தெடுத்து மண் நிரப்பிய ஒரு தொட்டியில் சுமார் ஒன்றரை இன்ச் அளவு ஆழத்திற்கு பூண்டுப் பல்லின் அடிப்பகுதி கீழேயும், மேல்பகுதி மேலேயும் இருக்குமாறு மண்ணின் உள்ளே வைத்து நட்டுவிட்டேன்.
இரண்டுமூன்று நாட்களில் துளிர்விட்டு மேலே வந்தது. சிறிது பிச்சு கசக்கி முகர்ந்து பார்த்தால் சாதாரண பூண்டு வாசனையைவிட இது அதிகமாக இருந்தது.
கடகடவென வளர்ந்தது.
செடிக்குக் கீழே பூண்டு வந்திருக்குமா எனத் தோண்டிப் பார்க்க ஆசைதான். 'இப்போதைக்கு வேண்டாம், கோடை முடியும் நேரம் வரட்டும்' என்றிருக்கிறேன்.
பூண்டுத்தாளை வைத்து என்ன சமையல் செய்யலாம் என காமாக்ஷி அம்மாவிடம் கேட்டபோது 'வெங்காயத்தாள் மாதிரியே பயன்படுத்திக் கொள்ளலாம்' என்றதும் கடலைப் பருப்பு வடை, அடை, தோசை, வத்தக்குழம்பு, புலாவ் என எல்லாவற்றிலும் சேர்த்துவிட்டேன். நன்றாகவே இருந்தது.
அறுவடையான பூண்டுத் தாள்கள்
பூண்டுத் தாளை நறுக்கி எடுத்த பிறகு ................. இரண்டொரு நாளில் மீண்டும் துளிர்த்து வளர ஆரம்பித்துவிட்டது.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
இன்று(05/10/14) காலையில் போய் பார்த்தால் .......... வாஆஆவ், பூண்டு செடியின் வேர் பகுதியில் நல்ல பிங்க் நிறத்தில் பளிச்சென பூண்டு வந்திருக்கு. மண்ணைப் போட்டு மூடியுள்ளேன். நன்றாக முற்றியதும் சொல்கிறேனே :)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்றுதான்(06/21/14) பூண்டு அறுவடை பற்றி எழுத முடிந்தது.
மண்ணுக்குக் கீழேயுள்ள பூண்டுதான் பிடுங்காததால் முளைத்து வெளியே வருகிறதோவென ஒரு ஆர்வக்கோளாறில் அந்த செடியைப் பிடுங்கிவிட்டேன். அது பூண்டு விதை என்பது அப்போதைக்குத் தெரியாது. அதற்கும் கீழேதான் பூண்டு இருந்தது. பிறகென்ன, மற்ற இரண்டு செடிகளையும் சேர்த்து பிடுங்கியாச்சு.
காய வச்சாச்சு. ஒரே நாள்தான், அடிக்கிற வெயிலில் ஈரமாவது ஒன்னாவது.
உரிச்சிப் பார்த்திடலாமா?
குட்டிகுட்டியாய் ஆறு விதைகள் இருந்தன.ஒரு விதை உருண்டோடிவிட்டது. தேடியும் கிடைக்கவில்லை.
ஒவ்வொன்றிலும் எத்தனை பூண்டுப்பல் இருந்தது என்றுதானே பார்க்கிறீர்கள்?
எங்கள் வீட்டில் பூண்டு சாப்பிட ஆள் இல்லையாம், அதனால் ஒரு பூண்டில் மூன்று பல்லும், ஒன்றில் இரண்டும், மற்றொன்று வெங்காயம் மாதிரியும் இருந்தது. இது வெங்காயமா அல்லது பூண்டுதானா என்பதை நாளைதான் நறுக்கிப் பார்க்க வேண்டும்.
இந்த அனுபவம் உங்களில் சிலருக்கும் இருந்திருக்கும். நாங்க சின்ன பிள்ளையா இருந்தபோது எங்கள் ஊரில் சிலரது வீட்டு மண்சுவரின் கீழே சிறுசிறு குழி இருக்கும்.
நன்றாகப் பார்த்தால்தான் அது தெரியும். அதைப் பிள்ளைகள் தேடிப்பிடித்து 'பன்னிக்குட்டி வாவா' என விரலால் தோண்டுவாங்க. அதிலிருந்து குட்டியா ஒரு உயிரி வெளியே வரும். அதை கைகளில் சேர்த்து வைப்பாங்க. இந்தப் பூண்டு விதைகளும் சிறு வாலுடன் அதே மாதிரியாகத்தான் இருக்கிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்று(06/23/14) மீண்டும் ஒரு குட்டியூண்டு அப்டேட்.
பூண்டு அறுவடையில் வெங்காயம் வடிவில் இருந்ததைப் பார்த்து 'பூண்டு செடியில் எப்படி வெங்காயம் வந்தது ?' என இவ்வளவு நாளும்
நினைத்திருந்தேன்.
இன்று நறுக்கிப் பார்த்தால் .........
அட, அதுவும் பூண்டுதான் !
வெங்காய வடிவிலான (கின்னஸுக்குப் போலாமா வேணாமா என ஒரே யோசனை) பூண்டு. நல்ல வாசனை.
ஆக மொத்தம் ஒரு பூண்டில் மூன்று பல்லும், மற்றொன்றில் இரண்டு பல்லும் , அடுத்ததில் ஒரு பல்லுமாக ....... எல்லோரும் பொறாமைப்படும் அளவில் அறுவடை அமைந்ததில் பெரும் மகிழ்ச்சி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெங்காயத் தாள்
பலமுறை சின்ன வெங்காயத்தை நட்டு வைத்துப் பார்த்துவிட்டேன். அது முளைத்து வெளியில் வரவே நீண்ட நாட்களாகும். அப்படியே வந்தாலும் கொஞ்ச நாளில் காணாமல் போய்விடும், அதாவது அழுகிவிடும்.
ஒருமுறை 'மகி'யின் பதிவைப் பார்த்து வெங்காயத் தாளின் வேரை நட்டு வைத்தாலும் அதிலிருந்து பயன் உண்டு என்பது புரிந்தது. முன்பே இது தெரிந்திருந்தால் பல ஒரு டாலர் பில்களை மிச்சம் பிடித்திருக்கலாமே, ஹ்ம் !
வெங்காயத் தாளிலிருந்து நறுக்கப்பட்ட வேர்கள் நடுவதற்குத் தயாரான நிலையில் ...
வேர் பகுதி மண்ணிற்குள்ளே இருக்குமாறு .....
மூன்று தொட்டிகளில் நட்டாச்சுங்கோ.
துளிர்விடத் தொடங்கியாச்சு !
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து ....
அறுவடைக்குத் தயாரான நிலையில் ...
அறுவடையான வெங்காயத்தாள்கள் :)
அறுவடையை முடித்த பிறகு மீண்டும் வளரும் என்ற ஆசையில்.....
கடகடவென வளர்ந்து இப்போது ஒரு வாரத்திற்குள்ளாகவே மீண்டும் அறுவடைக்குத் தயாராக உள்ளது. முடிந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கோ !